பாஜக அரசு முதன் முதலில் ஆட்சி அதிகாரத்தை அடைந்தபோது (2014) தேச ஒற்றுமைக்கான புதிய திட்டம் என ஆர்.எஸ்.எஸ் முதலான இந்துத்துவ அமைப்புகளின் தரப்பிலிருந்து உடனடியாகச் சில கருத்துகள் முன்வைக்கப்பட்டன. அரசியல் சட்டத்தின் 370வது பிரிவை நீக்குவது பொது சிவில் சட்டத்தை உருவாக்குவது என்பன அவற்றின் அடிப்படைகளாக இருந்தன. “கருத்தியல் மதவியல் மற்றும் சமூக வேறுபாடுகளைப் புறந்தள்ளித் தேச ஒற்றுமைக்கான சூழலைப் புதிய அரசு உருவாக்க வேண்டும்” என இன்னொருபக்கம் முழக்கங்கள் முன்வைக்கப்பட்டன. ஆர்.எஸ்.எஸ்ஸின் அப்போதைய மூத்த தலைவர்களான சுரேஷ் ஜோஷி முதலானோர் வெளிப்படையாக முன்வைத்த இக் கருத்துகளை மேலோட்டமாகப் பார்க்கும்போது இதில் பெரிதாக ஒன்றுமில்லை எனத் தோன்றலாம். ஆனால் இது இந்திய அரசின் அடிப்படை அணுகல் முறைகளை முற்றாக மறுதலிக்கும் ஒரு கருத்து எனவும் ‘வேற்றுமையில் ஒற்றுமை’ என அதுவரை இந்திய அரசின் அடிப்படை அணுகல்முறையாக இருந்ததற்கு இது முற்றிலும் எதிரானது என்பதும் அப்போதே நடுநிலையாளர்களால் சுட்டிக்காட்டப்பட்டன. “இங்கு வேற்றுமைகளே இருக்க இயலாது. யாரெல்லாம் தனது தந்தையர் பூமியை மட்டுமல்ல புண்ணிய பூமியையும் இந்தியாவில் காண்கின்றனரோ அவர்களே இந்த நாட்டுக்குரியவர்கள்” என்பதெல்லாம் சாவர்கர் முதலான இந்துத்துவத் தீவிரவாதிகள் முன்வைத்த முழக்கம். இங்குள்ள சிறுபான்மையினரை ஒதுக்கும் இந்துத்துவ பாசிச அரசியலின் குரல் இது என்பதை அக்கறையுள்ள நடுநிலையாளர்கள் அழுத்தமாகப் பதிவு செய்தனர்.