<p>'மினி தொடர் கதை </p><p>குறுநாவல் </p><p>இவற்றில் எந்தப் பெயரை வேண்டுமானாலும் நீங்கள் சூட்டிக்கொள்ளுங்கள். </p><p>கலைஞர் கருணாநிதி அவர்கள் எழுதிய நான்கு மணியான கதைகளை வெளியிடுவதில் நாங்கள் பெருமையடைகிறோம். </p><p>முதல் கதையின் பெயரே இந்த நூலின் பெயராக அமைகிறது. </p><p>கலைஞரது கதைகள் கட்டுரைகள் கவிதைகள் ஆகியவற்றை அழகிய நூல் வடிவில் கொணர்ந்து அந்த அழியாத இலக்கியச் செல்வங்களைக் காப்பதில் தமிழ்க்கனி பதிப்பகம் மகிழ்ச்சி அடைகிறது. </p><p>தமிழ் மக்களின் ஒத்துழைப்பும் உறுதுணையும் இடையறாது தொடர்ந்திட வேண்டுகிறோம். </p><p></p><p>திருக்குவளைக் கிராமத்திற்கே இந்தக் கல்யாணம் மிகப் மிகப் புதிது ! பழமையிலே ஊரிப்போனவர்கள் ஏராளம் இங்கே ! அறிவுப் பாதையிலே நடைபோட வேண்டுமென்ற ஆசை ஒருபக்கம் இழுத்தாலும் இறந்த காலக் கொள்கைகளை விடாப்பிடியாகப் பிடித்துக்கொண் டிருப்பவர்கள் அதிகம் நிறைந்த அழகான சிற்றூர் !' அடிக்கடி ஒலித்துக் கொண்டிருக்கும் ஆலயத்துமணி வான் முட்டும் கோபுரம்-எதிரே சிங்காரத்திருக்குளம்-கரையிலே தென்னைகளும் திண்ணையுள்ள வீடுகளும் தென்றலுக்கு ஏற்றவகையில் தெற்கு நோக்கியமைந்த 'அக்கிரகாரம்! இப்படியெல்லாம் கலை அழகோடு ஆரியக் களையும் நிறைந்திருக்கும் ஊரிலேதான் இந்தப் புதுமையான திருமணத்தை நான் செய்து கொள்ளப்போகிறேன் நண்பா! சென்னையிலேயிருந்து இந்த ஊர் அதிக தூரம்தான்! ஆயினும் நாமிருவரும் மிக நெருங்கிய வர்களாயிற்றே! எப்படியும் அலுவலகத்தில் 'லீவு' பெற்றுக்கொண்டு நீ வந்தே தீரவேண்டும்-இது அன்பின் ஆணை! என்று கடிதத்தை முடித்திருந்தான் ரத்தினம்.</p><p></p><p>கோகுலுக்கு என்ன செய்வதென்றே புரியவில்லை. நாலைந்து வருடங்களாக அவன் எந்தத் திருமண விழாக்களுக்கும் போனதே கிடையாது. </p>