நகரத்தின் நிலப்பரப்பு நினைவுபோல கலைந்து கிடக்கிறது. யாருமற்ற பேரொலியொன்று இரைந்துகொண்டேயிருக்கிறது. இயக்கம் ஸ்தம்பித்துப் போன நகரத்தின் அதீத வேகம். உற்றுப் பார்த்தால் நகர்ந்தும் நகராத படிமம் போல தோன்றுகிறது. அப்படியெனில் நாம் உணரும் அசைவுகள் செயற்கை ஊக்கம் என எண்ணத் தோன்றுகிறது. இதைக் குறிக்கும் சொற்குறிகள்தான் கவிதைகள் எனத் தோற்றம் கொள்கின்றன. ஒருங்குபெற சேரும் பிம்பங்கள் பிளந்து தன்னிலை தடுமாறித் தவிக்கிறது. ஒளிபுகா கண்ணாடியின் சருமத்தில் பட்டு சிதறும் உருவங்களின் இடையே நம் உருவம் தன் உருவம் தேடி அலைந்து தூர்ந்து போன களைப்பின் மொழிதான் நேசமித்ரனின் கவிதைகள். நியான் சொற்கள் வாக்கியமற்று திணறும் பேரோசையின் இரைச்சலை இவரது கவிதைகள் பேசிப்பேசி மௌனமாகி நிற்கின்றன. நகரம் இங்கு கணினி திரையின் இருபுறமாக பதிலிப்படுத்தப்படுகிறது. இயல்பான நிலையிலிருந்து பிறழ்ந்த கணம். ஒரு கணினிக்கு முற்-பிற் புறம் 'அவன்' மற்றும் 'அவள்' இடையேயான வேட்கை பரிமாற்றம் பிக்சல்களின் மறுசேர்க்கையிலும் டெசிபல்களின் சரக்கோர்வையாலும் இணைவு ஏற்படுகிறது. இக்கவிதைகள் நகர்மிகைகளின் கதையாடலை முன்வைக்கின்றன.- எஸ். சண்முகம்