இந்தியா இன்று ஒரு நாற்சந்தியில் நின்று கொண்டிருக்கிறது. அதன் வளர்ச்சி விகிதம் நம்முடைய இளைய தலைமுறையினரின் வேலைவாய்ப்புத் தேவைகளுக்குத் தீனிபோட முடியாத அளவுக்கு மிகக் குறைவாக இருக்கிறது. உலகளாவிய தேவைகளை ஈடு செய்வதற்கு வளர்ந்து வரும் நாடுகளுக்கு இடையே நிலவும் கடுமையான போட்டி அந்நிய நிறுவனங்களின் ஆதிக்கத்திற்கு எதிராக உள்நாட்டுத் தொழிற்துறையைப் பாதுகாப்பதற்கு உலக நாடுகள் காட்டும் தீவிரம் தொடர்ந்து அதிகரித்து வருகின்ற தன்னியக்கமாக்கம் போன்றவை சூழ்நிலையை மேலும் கடினமாக்குகின்றன. மக்களைப் பிளவுபடுத்தும் பெரும்பான்மைவாதம் எரியும் நெருப்பில் எண்ணெய் ஊற்றிக் கொண்டிருக்கிறது. முதலில் வேளாண்மை; அடுத்து குறைந்த திறன் தேவைப்படுகின்ற உற்பத்திசார் வேலைகள்; அதையடுத்து உயர்ந்த திறன் தேவைப்படுகின்ற உற்பத்திசார் வேலைகள்; இறுதியாக சேவைத் துறை. பாரம்பரியமாக தொழிலாளர்களின் வேலைப் பெயர்ச்சி இப்படித்தான் நடைபெற்று வந்திருந்தது. ஆனால் நெடுங்காலத்திற்கு முன்பே இந்த நிலையான வளர்ச்சிப் பாதையிலிருந்து இந்தியா விலகி வந்துவிட்டது. இனியும் சாத்தியமில்லாத வளர்ச்சிப் பாதைகளுக்குத் திரும்பிச் செல்ல முயற்சிப்பதற்குப் பதிலாக ஒரு தனித்துவமான இந்தியப் பாதையில் நாம் அடியெடுத்து வைக்க வேண்டும். நம்முடைய மக்களின் மனித மூலதனத்தில் முதலீடு செய்வதன் மூலமும் உயர்ந்த திறன்களை உள்ளடக்கிய சேவைகளிலும் புதுமையான புதிய பொருட்களை மையமாகக் கொண்ட உற்பத்தியிலும் வாய்ப்புகளை விரிவுபடுத்துவதன் மூலமும் பொருளாதார வளர்ச்சியை எவ்வாறு நம்மால் துரிதப்படுத்த முடியும் என்பதை இந்நூலின் ஆசிரியர்கள் இதில் விளக்குகின்றனர். இந்தியாவின் ஜனநாயக மரபுகள் இப்பாதையை ஆதரிக்கும். மேலும் நம்முடைய ஜனநாயக அமைப்புகளை வலிமைப்படுத்துதல் அதிகாரப் பரவலாக்கத்தை அதிகரித்தல் ஆகியவை உள்ளிட்ட ஆட்சிச் சீர்திருத்தங்கள் இதற்குப் பெரிதும் உதவும். கடந்தகாலத்தின் தளைகளைத் தகர்த்தெறிந்து எதிர்காலத்தின் சாத்தியக்கூறுகள்மீது கவனம் செலுத்தும்படி இந்நூலாசிரியர்கள் இந்தியாவுக்கு அறைகூவல் விடுக்கின்றனர்.