தாழ்த்தப்பட்ட மக்களுக்கு இழைக்கப்படும் அநீதிகள் ஒருபுறமிருக்க அவர்கள் சுயமரியாதையைப் பாதிக்கும் எத்தனை எத்தனையோ செயல்களில் வருணாசிரம தர்ம வெறியர்கள் எங்குப் பார்த்தாலும் ஈடுபட்டு வருகின்றனர். இவைகளுக்கும் பொருளாதாரக் காரணங்கள் உண்டு என்பதில் சந்தேகமே இல்லை. எனினும் பொருளாதார அமைப்பை மாற்றும்வரை கைகட்டி சும்மா இருக்கலாகாது. இவைகளையும் எதிர்த்துப் போராட வேண்டும். டாக்டர் அம்பேத்கர் அவர்களின் வாழ்க்கை வரலாறே தாழ்த்தப்பட்ட மக்களுக்கு வழிகாட்டியாக இருக்கும் காரணத்தால் அண்ணாரின் வாழ்க்கை வரலாற்றை எடுத்துக் கூறுதல் இந்நூலின் முக்கிய நோக்கமாகும். டாக்டர் அம்பேத்கர் அவர்களின் வாழ்க்கை வரலாறே தாழ்த்தப்பட்ட மக்களின் போராட்ட இயக்க வரலாறாகும்.