<p>ஏற்றப் பாட்டில் இரு நூறு சால்களுக்கு இருநூறு அடிகள் அமைத்திருக்கிறேன். அவற்றில் காலை நூறு சால்களுக்கு நூறு. பிற்பகல் நூறு சால்களுக்கு நூறு.</p><p></p><p>காலையில் கதிர் தோன்றுவது முதல் அது உச்சியை அடையும் வரை நூறு சால்கள் இரைத்தல் போதுமா எனில் போதாதுதான். இத்தனை சால்கள் இரைக்க வேண்டும் என்பது ஆங்காங் குள்ள பெருநில முடையார்க்கும் ஏற்றம் இரைக்கும் தொழிலாளிகட்கும் ஏற்படும் நடு நிலைத் திட்டத்தைப் பொறுத்ததாகும்.</p><p></p><p>நூறு சால்கட்கு மட்டும் நூறடி எழுதினமைக்குக்</p><p>காரணம் என்ன?அவ்வாறு அடிகளைத் திருப்பிக் கொள்ளலாம். அவ்வாறு திருப்பித் திருப்பிப் பாடும்போது காலைப் பதினோரு மணிக்குத் திருப்புகையில் கதிர் தோன்றுவதைச் சொல்லுகின்ற விடியற்கால 'அடி' சரியாய்</p><p>இராதே எனில் -நேரப் பொருத்தமிராத அடிகளை</p><p>நீக்கிச் சால்களின் தொகையில் கழித்துக் கொள்ளும்</p><p>திறமை இரைப்பார்க்கு உண்டு. இதுபோலவே மாலை</p><p>யிலும் என்க.</p><p></p><p>விளக்கு வைக்கும் வரைக்கும் ஏற்றம் இரைப்பதாய் எழுதியிருக்கிறேன். அதுமட்டு மன்று இராக்காலத்திலும் இரைக்க நேரலாம். அப்போதெல்லாம் இரைப்பவர் காலத்தை -நேரத்தைக் குறிக்கும் அடிகளை நீக்கிப் பொதுவான கருத்துளள அடிகளைப் பாடிக் கொள்க.</p><p></p><p>எங்கணும்-துறைதோறும் நம் கலை நம் ஒழுக்கம் பயிலவேண்டும். நம் நிலை நினைக்கப்படவேண்டும். இலேசில் இல்லை நம் முழு விடுதலை.</p><p></p><p>ஓங்கு கதிர் வா வா -- நீ</p><p>[ஒன்றுடனே] வாழி</p><p>மாங் கனியும் நீதான் -- அந்த</p><p>வானம் என்னும் தோப்பில்!</p><p>நீங்கும் பனி என்றே -- இங்கு</p><p>நீ சிரித்து வந்தாய்!</p><p>நாங்கள் மறப் போமோ -- நீ</p><p>(நாலுடனே) வாழி</p><p>ஐந் துடனே -- வாழி -- நீ</p><p>அள்ளி வைத்த தங்கம்!</p>