இது இளையராஜா புத்தகமும்தான். இளையராஜாவின் பாடல்கள் கடந்த அரை நூற்றாண்டாகத் தமிழர்களின் வாழ்க்கையை வடிவமைத்து வந்திருக்கின்றன. திரைப்படங்களிலிருந்து வெளியேறி தனித்த உயிர்களாக இப்பாடல்கள் ஜீவித்துக்கொண்டிருக்கும் மாயம் எப்படி நிகழ்ந்தது? நம் கொண்டாட்டங்களிலிருந்து சோகங்களிலிருந்து காதலிலிருந்து நினைவுகளிலிருந்து ஞாபகங்களிலிருந்து இளையராஜா பாடல்களை விலக்க முடியாமல் ஏன் வித்துக்கொண்டிருக்கிறோம் நாம்? இளையராஜாவிடமிருந்து தொடங்கும் இந்நூல் சினிமா சாதி அதிகாரம் மூன்றும் சந்தித்துக்கொள்ளும் ஒரு மர்மமான புள்ளியில் வேர் பிடித்து நம் உணர்வு ரசனை பண்பாடு மரபு நிலம் மொழி தத்துவம் வரலாறு என்று கிளைகளைப் பரப்பி விரிந்துகொண்டே செல்கிறது. கிராமமும் நகரமும்; சிறிய பண்பாடும் பெரிய பண்பாடும்; கபாலியும் கரகாட்டமும்; சங்க இலக்கியமும் மேற்கத்திய மொழியியலும்; வன்முறையும் காதலும்; சாதியமும் சினிமாவும் எதிர்பாராத தருணங்களில் சந்தித்துக்கொள்கின்றன. நாம் இதுவரை கேட்டிராத உரையாடல்களை நிகழ்த்துகின்றன. இந்த அபூர்வ சந்திப்புகளையும் உரையாடல்களையும் கூர்ந்து அவதானித்து பதிவு செய்திருக்கிறார் டி. தருமராஜ். இரண்டு அட்டைகளுக்கு நடுவில் சிக்கிக் கிடக்காமல் உயிர்ப்பெற்று எழுந்து வந்து நம்முன் நிற்கின்றன அவர் எழுத்துகள். இளையராஜாவின் பாடல்கள் போல.