இந்தத் தொகுப்பின் ஆகச்சிறந்த கட்டுரை ஐயாவின் கணக்குப் புத்தகம். அ.முத்துலிங்கம் அவர்களின் சிறுவயது முதல் பார்த்து வந்து அவரின் அப்பாவின் மீதான பார்வை அவருடைய தந்தையின் மறைவுக்குப் பின் அவர் பெட்டியினுள் கண்டெடுக்கும் அவருடைய கணக்குப் புத்தகத்தைப் பார்ப்பதில் முடித்து ஒரு முழுமையான வாழ்வனுபவத்தை வாசகனுக்குத் தந்துவிடுகிறார். இடையில் அவருடைய அப்பாவைச் சந்திக்க வரும் பெரியப்பாவின் தற்கொலை ஏற்படுத்தும் அதிர்ச்சி நம்மையும் சூழ்ந்துகொள்கிறது. வாழ்வின் நிரந்தரமின்மையும் அதன் சக்கரச்சுழற்சியின் வழியே ஒவ்வொருவரும் அடையும் அனுபவமும் முழுவதுமாகப் பொதுமைப்படுத்த இயலாதவை ஆனால் அனைவரின் வாழ்வனுபவங்களிலும் பொதுமைப்படுத்தி இணைத்துப் பார்க்கக் கூடிய தருணங்கள் பல உண்டு. அதைத்தான் எந்தப் படைப்பில் பார்க்க நேரும்போதும் நாம் அந்தப் படைப்பினுள் கரைந்து அந்தப் படைப்பின் ஒரு பகுதியாகவே இணைந்துவிடுகிறோம். அப்படியான பல்வேறு கணங்களை இந்தக் கட்டுரைத் தொகுப்பு நமக்குத் தருகிறது. - இரா. துரைப்பாண்டி