<p>இருபது வருஷங்களுக்குமுன் ஸ்ரீ வ.வே.சு. ஐயர் 'பாலபாரதி'என்னும் மாதப்பத்திரிகையின் முதல் இதழிலே 'லைலா மஜ்னூன்'என்ற சிறுகதை எழுதியிருந்தார். அதைப் படித்துப் பார்த்தபோது அந்த வகையான இலக்கிய அமைப்பிலே ஏதோ கவர்ச்சி இருப்பதாகத் தெரிந்தது. அதைப் பல முறை படித்தேன். கதைப்போக்கு வர்ணனை வாக்கியங்களின் ஒழுங்கு எல்லாம் என் உள்ளத்தைக் கொள்ளை கொண்டன. அந்தக் கதையிலுள்ள பல வாக்கியங்களைப் பாடல்களைப்போல் நான் சொல்லிக் கொண்டிருந்தேன். அப்பொழுதே சிறுகதை எழுத வேண்டுமென்ற ஆசை என் கருத்தில் முளைத்தது. சில பிரயத்தனங்களும் செய்தேன்.</p><p>என்னுடைய ஆசிரியராகிய பிரும்மஸ்ரீ மகாமகோ பாத்தியாய டாக்டர் உ. வே. சாமிநாதையரவர்களுடைய திருவருளால் பண்டைத் தமிழிலக்கியங்களின் சுவையை நுகரநுகரப் பழமையும் புதுமையும் கலந்த நெறி ஒன்று இலக்கியத்திலே வேண்டுமென்ற எண்ணம் வர வர வலியுற்று வந்தது.</p><p>தமிழ் நாட்டில் சிறுகதை எழுத்தாளர் பலராயினர். சிறுகதைக்குக் 'கிராக்கி'ஏற்பட்டது. சிறுகதைத் தொகுதிகள் பல வெளிவரலாயின. கலைமகள் இத்துறையில் செய்துவரும் சிறந்த தொண்டைத் தமிழ் நாட்டார் நன்கு அறிவார்கள்.</p><p>கலைமகள் தொடர்பு வாய்த்தபிறகு சிறுகதை எழுத வேண்டுமென்ற எனது அவா நிறைவேறத் தொடங்கியது. அதன் விளைவே இந்தப் புஸ்தகம்.</p><p>நான் அவ்வப்போது 'கலைமகளி'லும்ஆனந்த விகடன் தீபாவளி மலர்கள் 'தினமணி'ஆண்டு மலர் சுதேசமித்திரன்'விஜயதசமி மலர் 'ஆனந்த போதினி'வெள்ளிவிழா மலர் 'பாரதமணி லோகோ பகாரி'ஆண்டு மலர் என்பவற்றிலும் எழுதிய கதைகளில் பதினெட்டு இதில் அடங்கியுள்ளன.</p><p>இவற்றை வெளியிட்டு ஆதரித்த பத்திரிகாசிரியர் களுடைய பேரன்பைப் பாராட்டி என் நன்றியறிவைத் தெரிவித்துக் கொள்கிறேன்.</p><p></p>