தமிழ்நாட்டிலே இங்ஙனம் ஓர் உரையாடல் சற்றுக் காரசாரமாகக் கிளம்பிற்று 1943ஆம் ஆண்டிலும் அதற்குப் பிறகும். அந்த உரையாடலுக்குக் காரணமாக இருந்தது கம்ப ராமாயணம் பெரிய புராணம் முதலிய ஏடுகள் தமிழரிடையே ஆரியத்தைப் புகுத்திக் கேடு விளைவித்தனவாதலின் அவைகளைக் கொளுத்துவதன் மூலம் தமிழர் தமக்கு ஆரியத்தின் மீதுள்ள வெறுப்புணர்ச்சியைக் காட்ட வேண்டும் என்று பெரியார் துவக்கிய கிளர்ச்சியாகும். இராம காதையின் போக்கு தவறு என்பதிலே துவக்கிய கிளர்ச்சியைக் கலைவாணர்கள் தமக்குச் சாதகம் இருக்குமென்று எண்ணிக்கொண்டு கவிதை அழகு எனும் துறைக்குத் திரும்பினர்; எதிர்ப்பட்டாளத்தைச் சதுப்பு நிலப்பகுதியிலே புகும்படி செய்து தாக்கும் முறைபோல. கவிதையின் அழைப்பு பற்றியும் பிறகு ஆராயவேண்டிய அவசியம் நேரிட்டது. அதன் விளைவு கம்பனின் கவிதை காமரசக் குழம்பாக இருப்பதைக் கண்டறிந்தது. - க.நா. அண்ணாதுரை