‘பூவுக்குக் கீழே’ ‘சாசனம்’ ‘ஒவ்வொரு கல்லாய்’ ‘கொம்பன்’ ‘அப்பாவும் அம்மாவும்’ ஆகிய சிறுகதைத் தொகுதிகள் கந்தர்வன் என்ற படைப்பாளியின் ஆளுமையை வெளிச்சம் போட்டுக் காட்டக் கூடியவை. மாறிவரும் சமூக அசைவியகத்தின் வேகம் மனித மனங்களில் ஏற்படுத்தக்கூடிய வாழ்வியல் மதிப்பீடுகள் கிராமிய மனம் நகர மனம் ஏற்படுத்தும் மனநெருக்கடிகள் என நவீனக் கதையாடலின் புதிய அனுபவக் களங்களாக அவை விரிவு கண்டுள்ளன. கந்தர்வனின் வாசிப்பு அனுபவம் விரிவானது. புதிய உணர்திறன் முறைமை அவரது கதை சொல்லும் பாணியில் அழுத்தம் பெறுகிறது எனலாம். வளர்ந்து வரும் கலை இலக்கிய உரையாடல் போக்குகளை ஆழ்ந்து உணர்ந்து கொள்ள முற்படுபவர். நவீன கலை இலக்கியப் பிரக்ஞை தேடல் யாவும் கந்தர்வனின் படைப்பாளுமையை வழி நடத்துகிறது. இதனாலேயே கந்தர்வன் சிறுகதைகள் தமிழ்ச் சிறுகதை மரபில் புதிய தடம் பதிக்கிறது.