<p>வைகாசியில் கருடசேர்வை ஆனியில் திருமஞ்சனம் ஆடியில் பூர உற்சவம் ஆவணியில் அவிட்டம் புரட்டாசியில் சனிக்கிழமை உற்சவம் ஐப்பசியில் தீபாவளி கார்த்த்திகையில் தீபவிழா மார்கழியில் திருவாதிரை தையில் பூசம் மாசியில் மகம் பங்குனியில் உத்திரம் சித்திரையில் பௌர்ணமி. இப்படி மாதந்தோறும் ஒவ்வொரு திருவிழா நடத்தி தலைமுறை தலைமுறையாகப் பழக்கப்பட்ட மக்களிடையே மே தின விழாக் கொண்டாட முற்பட்டிருக்கிறோம். மே விழா மேதினியில் மக்களுக்கு வாழ்வு அளிக்கும் விழா என்று கூறினால்மக்கள் சுலபத்தில் நம்பமாட்டார்கள்; ஆச்சரியப்படுவார்கள். நாட்டு மக்களிலே சிந்திக்கக் கற்றுக்கொண்ட பகுதியினருக்கு மட்டுமே மே தின விழாவின் முக்கியத்துவம் தெரியும். மற்றவர்கள் இன்னமும் நான் முன்னால். குறிப்பிட்ட பல்வேறு திருவிழாக்களிலேயே ஈடுபடுப்வர்கள் - குடும்பம் குடும்பமாக!.</p><p></p><p>பொன்மலைத் திராவிட வாலிபர்கழகத்தார் மே தின விழாக் கொண்டாட முன்வந்தது பற்றி நான் மகிழ்ச்சியடைகிறேன். மேலும் சில நகரங்களிலும் நமது நண்பர்கள் இந்த விழாவைக் கொண்டாடுகின்றனர். திராவிடர் கழகம் அதிகாரபூர்வமாகவே அறிக்கை வெளியிட்டு அடுத்த ஆண்டு மே தின விழாவைத் தமிழ் நாடெங்கும் கொண்டாட ஏற்பாடு செய்யும் என்று நம்புகிறேன்.</p><p></p><p>மே தினம் என்ற உடனே சர்க்காருக்குச் சந்தேகம் வந்துவிடுகிறது. பொதுமக்கள் எக்காரணத்தைக் கொண்டோ எந்த விழாவிற்காகவோ ஒன்று திரண்டால் இன்றைய ஆட்சியாளர்கள் சந்தேகிக்கின்றனர் -சங்கடப்படுகின்றனர். நான் இந்தப் போக்கைக் கண்டு ஆச்சரியப்படவில்லை. சர்க்காரின் சுபாவம் அது. ஆனால் நம்முடைய கட்சி நண்பர்களிலேயே சிலருக்குச் சந்தேகம் உண்டாகிறது; மே தினத்தை நாம் ஏன் கொண்டாட வேண்டும்?</p>
Piracy-free
Assured Quality
Secure Transactions
Delivery Options
Please enter pincode to check delivery time.
*COD & Shipping Charges may apply on certain items.