இந்நூலின் நோக்கம் தரமான செறிவான மேடை உரையை வழங்க விரும்புகிறவர்களுக்கும் கேட்க விரும்புகிறவர்களுக்குமானது. சிற்சில விஷயங்களைக் கவனத்தில் கொண்டால் எவராலும் கருத்தாழம் மிக்க சொற்பொழிவை ஆற்றமுடியும்.நவீன வாழ்க்கையில் நீங்கள் விரும்பினாலும் விரும்பாவிட்டாலும் பேசியே ஆகவேண்டிய தருணங்கள் அமைந்துகொண்டே இருக்கும். இந்நூலில் பரிந்துரைக்கப்படும் ஆலோசனைகள் எல்லா வகையான மேடை உரைகளுக்கும் பொருந்தக்கூடியவை. ஆகவே இது அனைவருக்குமான புத்தகம்.தோன்றிற் புகழோடு தோன்றுக என்றால் பிறக்கும்போதே பெருமையோடு பிறக்கவேண்டும் என்று பொருளல்ல. அது மன்னர் வகையராக்களுக்குத்தான் சாத்தியம். ஓர் அவையில் தோன்றுவதாக இருந்தால் ஒரு மேடையில் தோன்றுவதாக இருந்தால் அதற்குரிய தகுதியோடும் புகழோடும் தோன்றுக என்பதே இதன் மெய்ப்பொருள். இந்நூலை வாசித்த பிறகு நீங்கள் தோன்றும் சபைகளில் மேடைகளில் புகழோங்கித் திகழ்வீர்கள்.