நகுமோ லேய் பயலே நூலை நாடடங்கு நாட்களில் வாசித்தேன். மொழி மண் மனிதர்கள் இலக்கியம் குழந்தைகள் குடும்பம் வேலை புகழ் மயக்கம் எனப் பலவற்றின் பாவனைகளை அசட்டுத்தனங்களை - உலகின் ஒப்பாரி உள்ளே வந்துவிடா வண்ணம் கதவடைத்து உள்ளிருக்கும் சூழலில் - சிரிக்கச் சிரிக்க வாசிக்க நேர்ந்தது இந்த நாட்களின் இனிய நினைவுகளில் ஒன்று. சிவாஜி நடித்த கர்ணன் படத்தில் கிருஷ்ணராக வரும் என்.டி.ராமாராவ் சொல்வார் இறக்கும்போதும் சிரிப்பை விரும்புகிறவன் நான். ஒரு ஒரிஜினல் சூப்பர் ஹீரோவுக்காக கச்சிதமான பன்ச் டயலாக். அப்படிப்பட்ட விருப்பம் கொண்ட எளிய ஆசாமிகளும் இருக்கக்கூடும். அவர்களுக்கான நூல் இது.- கடலூர் சீனு