<p>அழகான பெண் ஒளிமுகம் படைத்த உருக்குலையா மங்கை. வெள்ளை உடையால் அவள் அன்ன நடைக்கு அழகு சேர்க்கிறாள். சிவந்த கழுத்திலே ஒரு கறுப்பு மணி மாலை. அந்தக் கோதி முடித்த கூந்தலையுடைய கோதை - தலையிலே ஒரு கூடையுடன் தெருவிலே போகிறாள். அப்பழுக்கற்ற யௌவனத்தின் தனித்தன்மை வாய்ந்த அழகு ஊர்வலம்! இருள் படிந்த தெருவிலே அவள் நடந்து செல்வது - வையத்து மண்ணுக்கு வர விழைந்த வானத்துத் தாரகைதான் வந்துற்றதோ என எண்ணத் தோன்றியது! </p><p>அந்த ஜோதி மழை பொழியும் சொர்ணச்சிலையின் தலையிலே கூடை; கூடையிலோ துர்வாடை! ஆமாம் அழகியின் தலையில் ஓர் அழுகிய உருவம். கூடையின் அடிப்புறத்தைத் தாங்கியிருக்கும் அவள் இளங்கரங்கள் சுமை தாங்காமல் நடுங்கிக் கொண்டிருக்கின்றன. ஆனாலும் அந்த சுந்தரவல்லி போய்க் கொண்டுதானிருக்கிறாள். சோகத்திலும் ஒரு சோபிதம் இருக்கிறது என்பதை அவளது எழில் வதனம் கவிஞர்கட்குக் காட்சியாக்கிக் கொண்டிருக்கிறது. கூடையிலே அமர்ந்துள்ள அழுகிய உருவமோ புன்னகை புரிந்தவண்ணமிருக்கிறது. </p><p>அந்தப் புன்னகை எதையோ ஓர் இன்பத்தை எதிர்பார்த்து மலரும் புன்னகை. புன்னகையில் விசாரத்தைக் காணவேண்டுமா ? ஆசைப்படுவோர் அந்த உருவத்தின் இனிப்பைப் பார்த்துக்கொள்ளலாம். கூடையிலே இருந்த அந்த உருவம் ஆண் தனக்கென உரிய உடலில் கால் பாகத்துக்கு மேல் இழந்து விட்ட மனிதன்; மகரிஷி! மௌத்கல்யர் என்னும் பெயருடைய மகான். </p><p></p><p>'பெரிய' மனுஷன் 'பெரிய' ஆள் 'பெரிய' செல்வந்தன் 'பெரிய' பண்ணையார் என்பது போலப் 'பெரிய' வியாதி என்று ஒன்று உண்டே! அந்தப் பெருவியாதியால் பீடிக்கப்பட்டவர் அந்தப் பெரிய மகான். அவர்தான் தன்னுடைய அழகான மனைவியின் தலையில் ஏறிக்கொண்டு தெருவில் போகிறார். </p><p></p>
Piracy-free
Assured Quality
Secure Transactions
Delivery Options
Please enter pincode to check delivery time.
*COD & Shipping Charges may apply on certain items.