<p>'அழகின் சிரிப்'பைத் தந்த கவிஞர் இன்று 'நல்ல தீர்ப்பைத்' தந்துள்ளார். </p><p></p><p>அள்ளித் தெளித்திருக்கும் சுவையமுதம் நாடகத்திலும் - வசனத்திலும் மிளிர்கிறது. பழைமை கண்ட நமக்குப் புதுமையிலும் ஒரு புது வழியைக் காட்டுகிறார் புரட்சிக் கவிஞர். </p><p></p><p>வற்றாத சொற் சுவையும் குன்றாத அழகும் இதில் குறைவின்றிக் காண்கிறோம். </p><p></p><p>பிறை நாட்டின் தென்புறத்தில் அமைந்த குளிர் மலர்ச் சோலையில் கோடையின் கொடுமை நீங்கி இருக்க அந்நாட்டரச னாகிய வயவரி மன்னனும் அரசி கன்னலும் இளவரசி முல்லையும் வந்திருந் தனர். பிறை நாட்டின் படைத் தலைவன் மாழையும் மனைவி கண்ணியும் மகள் கிள்ளையும் வந்திருந்தனர். நாட்டின் அமைச்சு வல்லுளியும் மனைவி வேலியும் மகள் சாலியும் வந்திருந்தனர். மற்றும் கல்விச் செல்வரும் பொருட் செல்வரும் உறவோடு வந்திருந்தனர். </p><p></p><p>மற்றும் பிறை நாட்டின் மேற்கில் உள்ளதும் பிறை நாட்டின் சிற்றரசாய் அமைந்ததும் ஆகிய பீலி நாட்டின் மன்னன் கடம்பனும் அரசி ஆம்பலும் இளவரசி நிலவும் வந்திருந்தனர். குளிர் மலர்ச் சோலையில் அவர்கள் இனிதாக நாள் கழித்தார்கள் ஒவ்வொரு நாளும் விழா நாள். </p><p></p><p>இன்று மகளிர் நாள். </p><p></p><p>சிற்றரசன் மகள் நிலவு அரங்கேறுகின்றாள். மற்றப் பெண்டிர்கள் காட்சி காணும் அவாவோடு சூழ வீற்றிருக்கின்றனர். ஆடலாசிரியன் பாடு கின்றான்: இசைக் கருவிகள் வாய்திறக்கின்றன. </p><p></p><p>களை யெடுத்தார் பல பெண்கள்! - கீழ்க் </p><p>கவிந்தனவே அவர் கண்கள்! </p><p>வளை குலுங்கும் கைகள்! வளைந்திடும் மெய்கள் </p><p>விளைவைக் கொடுக்கும் அல்லி குவளை செந்தாமரைக் </p><p>களை யெடுத்தார் பல பெண்கள்! </p><p></p>