எஸ். செந்தில்குமாருக்கு நன்கறிந்த நிலமும் களமும் தொழில்சார் விவரணைகளும் நாவலின் நம்பகத்தன்மையை உறுதிப்படுத்த பெரிதும் உதவியுள்ளது. பதின்வயதிலிருக்கும் மூர்த்தியும் சர்க்கரையும் சிறுமோதலுக்குப் பின் அவரவர் பாதையைத் தெரிந்தெடுத்து முன்னகர முனையும்போது அந்தச் சிறுமோதலின் விளைவுகளே வினையாகி அவர்களைத் திசை திருப்பும் அவலமே இந்த நாவலின் மையம். சிறுநகரத்தின் இரண்டு இளைஞர்களை முன்னிறுத்தியுள்ள இந்தக் கதைக் களத்தை எந்தவொரு இடத்துக்கும் மனிதர்களுக்கும் பொருத்திப்பார்க்க முடியும். அறிவியல் தீர்வுகள் விளைவிக்கும் ஆழமான பாதிப்புகளை மனித சமுதாயம் கண்டுணர்வதற்கு வெகுகாலத்துக்கு முன்பே ஒரு கலைஞன் தன் உள்ளுணர்வின் வழியாக அதைத் தன் படைப்பின் மூலமாக குறிப்புணர்த்திவிடுகிறான் என்பது வரலாறு. - எம். கோபாலகிருஷ்ணன்