உலகளாவிய மொழிபெயர்ப்புக் கவிதைகளை வாசிப்பதில் அதுவும் அவை தமிழில் கிடைக்கும்போது அம்மொழியில் இயங்கிவரும் கவிஞனுக்குப் பார்வை விசாலமடைகிறது. கவிஞரும் ஓவியருமாகிய தாரா கணேசன் தனது மொழிபெயர்ப்பில் ஆறு நோபல் பரிசு பெற்ற உலகக் கவிஞர்களின் கவிதைகளைத் தனது விரிவான கவிதை வாசிப்பின் நுட்பங்களின் வழியே மிகுந்த கவனத்துடன் தேர்ந்தெடுத்திருக்கிறார். அடிப்படையில் இக்கவிதைகள் பிரபஞ்சத் தனிமையையும் மொழியின் மூலம் இந்த உலகத்தைத் திரட்டிக்கொள்ளும் ஆத்ம பலத்தையும் அதன் அழகியலையும் மனிதகாதலின் உன்னதங்களையும் ஒருசேர அழைத்துக் கொண்டு தமிழுக்குள் வந்து சேர்ந்திருக்கின்றன. இதுவரை உலகில் நடந்த அத்தனை விதமான போர்கள் இன்னபிற நிகழ்வுகள் எல்லாவற்றிற்கும் அப்பாலும் இக்கவிஞர்கள் எதை உள்ளொளியாக உணர்ந்தார்களோ அதையே தம்முடைய கவித்துவ மனநிலையாகவும் கொண்டு மிகச் சிறப்பாக இவற்றை மொழிபெயர்த்துள்ளார்.