தசை ஈந்து பிழைக்கும் பாலியல் தொழிலாளி ஒருத்தியின் குரல் இது. துயர் மட்டுமல்ல இதன் நாதம்; எள்ளலும் ஏக்கமும் கோபமும் காதலும் சேர்ந்தே ஒலிக்கின்றன. அதிலே ஆன்மாவாக காமம் ஆயிரம் ஆண்டுகள் புளித்த கள் போல் நுரைத்துப் பொங்குகிறது. குறிஞ்சி முல்லை மருதம் நெய்தல் பாலை என சர்வ நிலங்களிலும் பரத்தையானவள் தன் பாடுகளைப் பாடித் திரிகிறாள். தலைவன்களுக்கு தன்பால் இருக்கும் அச்சத்தை தலைவிகளுக்கு வாய்க்காத தன் பிரத்யேகச் சுதந்திரத்தைப் அலட்டுகிறாள். இந்த 150 சிறு கவிதைகள் நம்மிடம் யாசிப்பது புன்னகையோ கண்ணீரோ அல்ல; புரிதலை!