புதுக்கவிதை ஆரம்பகாலம் முதலே பலத்த எதிர்ப்பு பரிகசிப்பு கண்டனம் கேலி குறைகூறல் ஆகியவற்றுக்கு இடையிலேதான் வளர வேண்டியிருந்தது. அக்காலத்திய இலக்கிய ஏடுகளில் விவாதங்களும் நிகழ்ந்துள்ளன. அந்நாளையப் பத்திரிகைகள் இன்றைய ரசிகர்களுக்கும் இனி வரவிருக்கும் இலக்கியப் பிரியர்களுக்கும் கிடைக்கக்கூடியன அல்ல. ஆகவே விவாதக் கட்டுரைகளை இவ்வரலாற்றில் நான் விரிவாகவே எடுத்து எழுதியிருக்கிறேன். அதேபோல முக்கியமான கவிதைகளைக் குறிப்பிடுகையில் ரசிகர்களுக்குப் பயன்படும் விதத்தில் அக்கவிதைகளை முழுசாகவே தந்திருக்கிறேன்.