<p>சமதர்மம்--ருசிகரமான வார்த்தை--நாட்டிலே இன்று பலராலும் பேசப்பட்டுவரும் இலட்சியம். பலராலும் என்றால் உண்மையிலேயே அந்த உயர்ந்த இலட்சியத்தின்படி சமூகம் திருத்தி அமைக்கப்பட வேண்டும். மக்களுக்குள் எந்தக் காரணங் கொண்டும் பேத உணர்ச்சியோ அதனாலான கேடுகளோ இருத்தல் கூடாது. வாழவேண்டும்; பிறர் வாழ்வைக் கெடுக்காமல் என்ற சிறந்த நோக்கங் கொண்டவர்கள் மட்டுமல்ல நாட்டிலேயுள்ள காட்டு ராஜாக்கள் கூடப் பேசத் தலைப்பட்டு விட்டனர்.</p><p></p><p>நாம் அனைவரும் சமம் என்பது உறுதியாச்சு என்னும் கவிதா நடையிலே மட்டுமல்ல; அவனும் மனுஷன் தானேய்யா அவன் என்ன தலையில் கொம்பு முளைத்தவனா?என்று தெருக்கோடி பாஷையில்கூட.</p><p></p><p>சமத்துவமாக வாழவேண்டும் என்றபேச்சு ஒவ்வொருவர் பேசும்போதும் ஒவ்வொரு விதமான பொருள் இருக்கிறது.</p><p></p><p>முடிதரித்த மன்னன் கூறுகிறான்;நமது ஆட்சியிலே அனைவரும் சமம்; நாம் நமது மக்களிலே பேதா பேதம் பார்க்க மாட்டோம்என்று. மன்னனின் சமத்துவ நோக்கத்தை வெளிப்படுத்தும் பேச்சாகவே இது முதலில் தோன்றும். ஆனால் சற்றுச் சிந்தித்துப் பார்த்தால்... நமது ஆட்சியிலே நமது கண்களுக்கு... என்ற வாசகங்கள் மூலம் மன்னன் தன்னை அனைவருக்கும் மேலாக்கிக் கொண்டு தனது அதிகாரத்தை ஊர்ஜிதப் படுத்திக் கொள்கிறான் என்பது விளங்கும்.</p><p></p><p>கோபமாக இருக்கும்போது குப்பன் கூறுகிறான்; அவனவன் ஜாதி அவனவனுக்கு உயர்வுதானய்யாஎன்று. அவனை பிறகு குளிர்ந்த மனதுடன் இருக்கும் போது என்ன இருந்தாலும் அவர் மேல்ஜாதிக்காரர்என்று பேசுகிறான். குளிர்ந்த மனதுடன் இருக்கும்போது மேல்ஜாதிக்காரன் கூறுகிறான்: குப்பா ஜாதியிலே என்னடா இருக்கிறது? எல்லாம் அவாள் அவாள் குணத்தைப் பொறுத்து இருக்கிறதுஎன்று. </p>