“நா தொலைஞ்சு போறேன்... தொலைஞ்சு போறேன்! அப்பத்தான் உங்களுக்கு நிம்மதி ஏற்படும்னா தொலைஞ்சுதான் போகணும்.”அடக்க அடக்கத் திமிறிக்கொண்டு சந்தியாவுக்கு ஆத்திரம் பொங்கியது. அடியம்மா அது என்ன ஆத்திரம். அது பூகம்பமாய் வெடித்து ஊழிக்காற்றாய்ப் பொங்கும் ஆக்ரோஷத்தில் ஒரு சுகானுபவம் கூட ஏற்பட்டது புதிய பலம் ஊற்றெடுத்தது போல. மனசு மதர்ப்புடன் நிமிர்ந்தது என்ன செய்துவிடுவீர்கள் என்னை என்கிற எக்களிப்பில்.“சந்தியா...”குரல் மிக மெலிதாகத்தான் வந்தது.சந்தியாவின் தலை சிலிர்த்துக்கொண்டு திரும்பிற்று. ஜன்னலுக்கு வெளியே அம்மாவுடைய முகம் தெரிந்தது. கவலையில் பீதியில் வெளிறிப்போன முகம்.குபீரென்று மனசில் மீண்டும் ஏதோ பற்றிக் கொண்டது.“என்னைச் சும்மா விடமாட்டியா நீ?” என்றாள் சந்தியா குரலை உயர்த்தி.அம்மா அதை அலட்சியம் செய்யாமல் ணித்துப்போன குரலில் சொன்னாள்:“எதுக்குடி உனக்கு இப்படிக் கோபம் வருது. என்ன சொல்லிட்டேன் நா இப்ப உன்னை?”“என்ன சொல்லல்லே? அம்மா போதும் இங்கிருந்து போ. எனக்கு அலுத்துப்போச்சு. காலையிலிருந்து ராத்திரிவரை லெக்சர் கொடுக்கிறதைத் தவிர வேறே ஏதாவது உனக்கும் அப்பாவுக்கும் பேசத் தெரியுமா? என்னைப் பச்சைப் புள்ளையாட்டம் இல்லே நடத்தறீங்க! இனிமே என்னாலே ஒரு வார்த்தைகூடத் தாங்கிக்க. முடியாது. வேற இடம் பார்த்துக்கிட்டுக் கிளம்பிடுவேன் பொறுக்க முடியல்லேன்னா!”நாவலிலிருந்து...