2008க்கு முன்பாக எழுதிய கட்டுரைகளில் ஒன்றுகூட இப்பொழுது கைவசமில்லை. வெளிவந்த இதழ்கள் தொலைந்துபோனதோடு கையெழுத்துப் பிரதிகளும் இல்லாததால் அதை வாசிக்கும் துர்பாக்கியம் வாசகர்களுக்கு நேரவில்லை. இந்தத் தொகுப்பிலிருக்கும் கட்டுரைகளுமே கூட கைவசமிருந்ததில் பாதி தான். சினிமா இலக்கியம் என வெவ்வேறு வகைமைகளில் வெவ்வேறு காலகட்டங்களில் எழுதிய இக்கட்டுரைகளை வாசிக்கையில் அவ்வப்போது தொகுப்பாக்கி இருக்கலாமோ என இப்பொழுது தோன்றுகிறது. புனைவுகளில் தொடர்ந்து இயங்கி வந்ததால் அபுனைவுகள் எழுதுவதற்கு ஒரு தயக்கமும் சோம்பேறித்தனமும் இருக்கும். ஆனால் அபுனைவுகள் எழுதும் போதுதான் நிறைய வாசிக்கவும் கற்றுக் கொள்ளவும் முடியும். அறிவின் விசாலமான கதவுகளைத் திறந்து விடுவது அபுனைவுகள் தான். அந்த வகையில் அ.மார்க்ஸ் எஸ்.வி.ஆர் வ.கீதா ரவிக்குமார் ஸ்டாலின் ராஜாங்கம் சாரு நிவேதிதா சி.மோகன் இவர்கள் ஒவ்வொருவரின் நூல்கள் வழியாகவும் நான் கற்றுக் கொண்டது அனேகம். இந்தக் கட்டுரைகள் எழுத ஏதோவொரு வகையில் அவர்களின் எழுத்துதான் தூண்டுதலும். தமிழ் சிறுபத்திரிக்கை மரபிலிருந்துதான் வலுவான கோட்பாட்டாளர்கள் இங்கு உருவானார்கள் எண்பதுகளுக்குப் பிறகு புனைவுகளிலும் கவிதைகளிலும் நிகழ்ந்த அரசியல் ரீதியான மாற்றம் என்பது கோட்பாட்டாளர்களால் மட்டுமே சாத்தியமானது. வெவ்வேறு தத்துவங்களை புதிய கண்ணோட்டங்களை எழுத்து முறைகளை தமிழுக்குக் கொண்டு வந்த அவர்கள் யாருக்கும் உரிய அங்கீகாரம் கிடைத்திருக்கவில்லை என்கிற வருத்தம் எனக்குண்டு. கவிஞர்களையும் புனைவு எழுத்தாளர்களையும் கொண்டாடிய அளவிற்கு நாம் ஆய்வாளர்களையும் கோட்பாட்டாளர்களையும் கொண்டாடவில்லை. -லஷ்மி சரவணக்குமார்