<p>நம் தமிழ்நாட்டவர் பொருளையுந் தமிழ் நாட்டையடுத்துள்ள மற்றை இந்தியநாட்டவர் பொருளையும் மேல்நாட்டவர் பல வழியிற் கவர்ந்து செல்கின்றார் என்னுங் கூக்குரல் ஒலியும் அதனைத் தடை செய்து அந்நாட்டவரின் பொருள் இங்கேயே நிலைபெறுமாறு செய்தல் வேண்டின் அயல் நாட்டவர் இங்கே விலைப்படுத்தக் கொண்டு வரும் பண்டங்களை வாங்காது முற்ற ஒழித்தலே செயற்பாலதென்னும் ஆரவாரமும் நாடு எங்கும் பரவிப் பலவகைக் குழப்பங்களையும் பலவகை துன்பங்களையும் உயிரழிவு பொருளழிவுகளையும் ஆங்காங்கு விளைத்து வருகின்றன. போர் அல்லலுக்கு இடமான இப்பிழைபாடான வழியிற் புகுந்து நம்மனோர் துன்புறாமல் அவர்களைப் பாதுகாத்தல் வேண்டியே எமது அறிவுரையை இங்கெழுதுகின்றோம். இதனை நன்றாக ஆராய்ந்து பார்த்து எமதுரை பொருந்துமாயின் அதனைக் கைப்பற்றி யொழுகி நம்மவர் நலப்படுவாராக!</p><p></p><p>முதலில் நம் நாட்டவர்பால் உள்ள பெருங்குறை என்னென்றால் எதனையும் ஆய்ந்து ஓய்ந்து பார்க்குங் குணம் இல்லாமையேயாம். ஒருவர் கல்வியறிவு ஆராய்ச்சியுடைய பெரியாராயிருந்தாலும் அவரைப் பத்துப்பேர் கொண்டாடா விட்டால் அவரை நம்மனோர் தாமுங் கொண்டாட மாட்டார்; அதுவேயுமன்றி அவரைப் பத்துப் பேர் பொறாமையினாலோ அல்லது வேறு காரணத்தாலோ இழித்துப் பேசக்கேட்டால் அது தகுமா தகாதா என்று ஆய்ந்து பாராமல் தாமும் அவரை உடனே இழித்துப் பேசிவிடுவர்; அவர்க்குத் தீங்கும் இழைப்பர். இனி மற்றொருவர் கல்வி அறிவு ஆராய்ச்சிகள் சிறிம் இல்லாராயினும் அல்லது அவை சிறிதே உடையராயினும் பத்துப் பேர் அவர்பால் வைத்தப் பற்றினாலே அல்லது அவர்பால் தாம் பெறும் ஏதேனும் ஒரு பயன் குறித்தோ அவரைக் கொண்டாடுவாராயின்</p>