<p>உமா ஒரு பூனைக்குட்டி வளர்த்து வந்தாள். கீதா என்று அதற்குப் பெயர். கீதா மிகவும் நல்ல பூனைக்குட்டி. திருட்டுத்தனமாக அது பாலைக் குடிக்காது; எங்கேனும் நல்ல காரியமாய்ப் போகும் போது குறுக்கே போகாது; நடு இரவிலே 'மியாவ் மியாவ்' என்று கத்தித் தூக்கத்தைக் கெடுக்காது. </p><p></p><p>இப்படிப்பட்ட பூனைக்குட்டியின் மேல் ஒருநாள் உமாவின் அம்மாவுக்குக் கோபம் வந்துவிட்டது. ஏன்? அது ஏதாவது தப்புச் செய்துவிட்டதா? இல்லவே இல்லை. தப்புச் செய்தது உமாதான். ஆனால் அவள் கீதா மீது பழியைப் போட்டுவிட்டாள். </p><p></p><p>அன்று அம்மா! அம்மா! என்று கூவிக்கொண்டே அம்மாவிடம் ஓடிவந்தாள் உமா. அப்போது அவள் கையிலே ஒரு கண்ணாடி டம்ளர் இருந்தது. முழுசாக இல்லை; </p><p></p><p>உடைந்து இரண்டு துண்டுகளாயிருந்தது. அதைக் காட்டி இதோ பாரம்மா நான் காப்பி குடித்துவிட்டு சுவர் ஓரமாக டம்ளரை வைத்திருந்தேன். கீதா தட்டி உடைத்துவிட்டது என்றாள். </p><p>அதே சமயம் கீதாவும் அங்கே வந்தது. என்ன கீதா உடைத்துவிட்டதா! அந்த டம்ளரை வாங்கிச் சரியாக ஒரு வாரம்கூட ஆகவில்லையே... இவ்வளவு நாளும் சாது மாதிரி இருந்ததே இந்தப் பூனைக்குட்டி! இப்போது என்ன கேடு காலம் வந்துவிட்டது? என்று சிறிது கோபமாகக் கூறினாள் உமாவின் அம்மா. </p><p></p><p>என்னம்மா இப்படி என் மேலே பழியைப் போடுகிறீர்களே! நானா டம்ளரை உடைத்தேன்? உங்கள் மகள் உமாதான் காப்பியைக் குடித்துவிட்டு டம்ளரை அரையின் நடு மத்தியிலே வைத்திருந்தாள். நீங்கள் சாப்பிடக் கூப்பிட் டதும் அவசரம் அவசரமாக ஓடிவந்தாள். வரும்போது அவள் கால் பட்டு டம்ளர் உடைந்துவிட்டது. </p>