ஆழ்ந்து சிந்தித்து அலசி ஆராய்ந்து பார்த்தால் நிர்வாகம் சட்டம் ஒழுங்கு காவல் வழக்கு நீதிபரிபாலனம் எல்லாமே எளிய மனிதர்களைக் குறிவைத்து இயங்கிடும் உண்மை பிடிபடும். எல்லா மனிதர்களையும் முறைபடுத்திட நிறுவப்பட்டிருக்கும் ஏற்பாடுகளே இவை என்று சொல்லிக்கொள்ளலாம். ஆனால் பல நேரங்களில் அது வெறும் வாதம் மட்டுமே. இந்த உலகில் திரும்பும் திசையெல்லாம் சாதாரண மனிதர்களின் மீது அதிகாரம் செலுத்தப்பட்டுக்கொண்டேயிருக்கிறது. அங்குலம் அங்குலமாய் வன்முறை பிரயோகிக்கப்பட்டுக்கொண்டேயிருக்கிறது. உலகின் மிக அடிப்படையான இயங்கியல் தத்துவமே அதிகாரமும் வன்முறையும்தான் என்றால் நம்மை நாம் நாகரிகச் சமூகம் என்று சொல்லிக்கொள்வதற்கு என்ன அருகதை இருக்கிறது? வாழ்க்கை முழுவதும் துன்பத்தால் ஆட்பட்டு எழுந்துவரும் இந்நாவலின் நாயகன் கவசிநாதன் அதிகாரத்தின் அடக்குமுறைக்கு ஆட்பட்டு வன்முறைதான் உலக நியதியோ எனத் தடுமாறுகிறான்; அதை ஏற்காமல் எதிர்த்துப் போராடுகிறான்; நீதியை வாஞ்சிக்கிறான். இறுதியாக உலகின் இயங்கியல் தத்துவம் என்பது எளிதில் புலப்படாத வண்ணம் மறைக்கப்பட்டிருக்கின்ற சமத்துவமே என்பதை உணர்ந்துகொள்கிறான்.